Tuesday, October 9, 2018

சிவனை சிறைவைத்த பாவாடைராயன்!

சிவனை சிறைவைத்த பாவாடைராயன்!
பிரம்மனின் சாபத்தால்,பரதேசிக் கோலத்தில் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்து உண்டு வாழும் பிச்சாண்டவரான சிவபெருமான், தான் செல்லும் இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு வந்தார்.

     ஆனாலும், தன கையில் உள்ள கபாலத்தை எடுக்க முடியாத நிலையில்தான் அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்பவர்களும், அவருக்கு உணவு அளிப்பவர்களும், அவரை ஒரு பரதேசியாகவும், சாமியாராகவும் பார்த்தார்களே ஒழிய, அவர்தான் சிவன் என்பதை யாரும் அறியவில்லை.

     அப்படியே அவர் வந்து கொண்டிருக்கும் வழியில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வல்லம்படுகை என்ற ஊர் வந்தது. ஊர் அடங்கிய இருட்டு வேலை. அந்தப் பரதேசியை கண்ட ஊர்க்காவலன் பாவாடைராயன், அவரை சிறையில் அடைத்துவிட்டான்.

     அந்தப் பரதேசி,சிறையிலேயே இருக்கட்டும், காலையில் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து சென்று விட்டான்.

     இரவு முழுவதும் ஒய்வெடுத்து விட்டு காலையில் வந்து அங்கே பார்த்த காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. ஆகா, இது என்ன அற்புதக் காட்சி. இந்த கண்கள் காண்பது கனவா? என்று நாடு நடுங்கிப் போன பாவாடைராயன், சிவனின் சுய ரூபம் கண்டு அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

     உலகுக்கெல்லாம் அருள் வழங்கும், இந்த அபயக் கரங்களிலா விலங்கிட்டு சிறையில் அடைத்தேன். சிவபெருமானே, தாங்களை யார் என்று அறியாமல், நான் செய்த மாபெரும் தவறை மன்னித்து எனக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று சிவனிடம் மன்றாடி வேண்டினான்.

     மேலும், தாம் அடியவனாய் இருந்து பணிவிடை செய்ய தமக்கு அருள்புரிய வேண்டும் என்றும், சாபம் தீரும் வரை, ஈசன் அங்கேயே குடிகொள்ள வேண்டும் என்றும் பாவாடைராயன் மனமுருகி வேண்டினான்.

     பக்தனின் அன்பில் மெய் மறந்து எண்ணற்ற வரங்களை வாரி வழங்கும் ஈசன், பாவாடைராயனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டாரா என்ன? அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தான்.

     அதனால் வல்லம்படுகையில் எழுந்தருளியுள்ள ஈசன் பரதேசியப்பர் என அழைக்கபடிகிறார்.
  
     அங்கு, கையில் பிச்சை பாத்திரமாக கபாலத்தை மட்டுமே ஏந்திய பரதேசியப்பருக்கு, காவல் செய்பவராக பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார். கோயில் பிராரங்களில், விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் இருக்க, ஆலயத்தின் பின்புறத்தில், முத்துநாச்சியார், அறியனாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்- வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்(https://pavadairayan.blogspot.com/2016/09/blog-post_32.html?m=1)

No comments:

Post a Comment

Google Analytics Alternative